‘குழந்தைகளும் தொலைக்காட்சியும்’ பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்தாளர்
ஜெயமோகன் சொன்ன பதிலுரையே இது.
நானும் அருண்மொழியும் 2002 வாக்கில் ஒரு ரயில் பயணத்தில் குழந்தைகளிடம் தொலைக்காட்சி
உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய கட்டுரையை வாசித்தோம். சிறுவனாக இருந்த
அஜிதனுக்கு அந்தக் கட்டுரையில் இருந்ததை நான் விளக்கிச் சொன்னேன். எங்கள் வீட்டில்
தொலைக்காட்சி தேவையில்லை என்ற முடிவை அவனும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம்.
அப்போது சைதன்யா சின்னக் குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி
இணைப்பு இல்லை.
வரைகலை கதைத்தொடர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொலைக்காட்சியே குழந்தைகளின் அறிவு
வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது என்பதே என் எண்ணம். பல பெற்றோர் தங்களுக்குத்
தொலைக்காட்சிப் பித்து இருப்பதை மறைக்க ‘டிவியிலே நல்ல புரோக்ராம்லாம் கூட வருதே…இப்ப டிஸ்கவரி சேனல் இல்லியா?’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன்.
உண்மையில் தொலைக்காட்சி எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது.
வீட்டில் தொலைக்காட்சி இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது
அவர்களுக்குத் தீங்களிக்கக் கூடியது.
காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். தொலைக்காட்சி மிகப் பிரம்மாண்டமான
ஒரு பொது ஊடகம். கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாக வேண்டும்.
ஆகவே அது மிகவும் சராசரியாகவே நிகழ்ச்சிகளை அளிக்கமுடியும். அது பொது ஊடகத்தின்
கட்டாயம்.
ஆகவே, தொலைக்காட்சி அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான நிகழ்ச்சிகளை
உருவாக்கும். உச்சகட்ட விளம்பரம் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.
கச்சிதமான சராசரியாக அமைந்த நிகழ்ச்சியே வெற்றிபெறும், அதற்குத்தான் அதிக நிதி கிடைக்கும். ஆகவே
அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்சியானதாகவும்
இருக்கும்.
அதிகமாக வெற்றி பெறும் நிகழ்ச்சி, அதாவது மிகச்சராசரியான நிகழ்ச்சிதான் வசதியான
நேரத்தில் ஒளிபரப்பாகும். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.
இதன் விளைவாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அனைவரும் சராசரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்படி
சிக்கவைக்கப் படுகிறார்கள். அவர்களின் ரசனையும் அறிவுத்திறனும் சராசரியில்
கட்டிப்போடப்படுகின்றன.
இது குழந்தைகளுக்கு மிக ஆபத்தானது. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய தனித்தன்மையைக்
கண்டடைந்து அதை வளர்த்துக் கொள்ளவேண்டிய வயதில் சராசரித் தன்மையில் சிக்கிக் கொள்கிறார்கள். சராசரி உணர்ச்சிகளும் ரசனைகளும் அறிதல்களும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள்
சராசரிகளாக வளர்கிறார்கள்.
தொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி
வலியுறுத்துகிறது அது. சிந்திக்க விடாமல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அது நம்மை
அடித்துச் செல்லும் தன்மை கொண்டது. நம் செய்தி – விவாத நிகழ்ச்சிகளை மட்டும் பாருங்கள்.
சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும். நீங்களும் விவாதித்துக் கொண்டே
இருப்பீர்கள்.
ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த விவாத நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது
ஒரு நல்ல கட்டுரையளவுக்குக் கூட இருக்காதென்பதை யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.
வரைகலை கதை நிகழ்ச்சிகள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில்
குழந்தைகளின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம்
ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டவை. ஆகவே குழந்தைகளை மிக எளிதாக அவை
உள்ளே கொண்டு சென்றுவிடுகின்றன.
இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான
வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம்
புதையல்களை அடைவது போல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க் குணங்களையே தொட்டு
வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கி வாழ்தலுக்காக, தாக்குப் பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட
ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. காட்சி ஊடகம்
அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே
நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன.
மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள்
மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.
மொழிவழிக் கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம்
நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத் தெரிந்திருந்தால்தான்
நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.
காட்சி ஊடகங்கள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த
அகமொழியைக் கண்டடைய வேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் காட்சி ஊடகங்களில்
நுழைவதனால் அது சிந்திக்கத் தெரியாததாக ஆகி விடுகிறது.
கடைசியாக, தொலைக்காட்சி போன்ற
ஆட்படுத்தும் தன்மை கொண்ட ஊடகம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. என் புரிதலில் குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக் கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. நாம் அவர்களிடம்
பேசுவதும் அவர்கள் நம்மிடம் பேசுவதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச் சூழ்ந்திருக்கும் சமூகத்துடன் உறவு கொள்கிறது. அதைப் புரிந்துகொண்டு கையாளக்
கற்கிறது. அதில் தன் இடத்தைக் கண்டடைகிறது.
நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக உரையாடுபவனாக இருந்தேன்.
அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். [சைதன்யாவின் பேச்சை ஒரு நூலாகவே
எழுதியிருக்கிறேன்] குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் சொல்வார்கள்.
கூடவே, ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனைப் பள்ளி, கற்பனை நண்பர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக
முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்து கொள்வதற்கான வாசல் அது.
உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான்
குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதை தொலைக்காட்சி அடிமைத்தனம்
அழிக்கிறது.
தொலைக்காட்சி குழந்தைகளை வாசிப்பிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும்
இன்றும் புத்தகங்களே அறிவுக்கான ஒரே வழி. நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும்
ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது வாசித்தால்கூட அவனுடைய
அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.
ஏனென்றால், புத்தகங்கள் நம்மை செயல்படச் செய்கின்றன. நாம் வாசிக்கும்போது அந்த
நூலை நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக் கொள்கிறோம். அது
ஓர் உழைப்பு. எந்த உழைப்பும் நம்மை மேலும் தகுதி கொண்டவர்களாகவே ஆக்கும்.
ஆனால் தொலைக்காட்சி பார்க்கையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் எதையும் செய்வதில்லை. அது நம் மீது அருவி போல
கொட்டிக் கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில தகவல்களை, காட்சிகளை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக
தகுதிப்படுத்திக் கொண்டு மேலே செல்வதில்லை.
புத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும்
தெரிவுக்கான சாத்தியங்கள் முடிவில்லாதவை. புத்தக உலகில் நுழையும் குழந்தை, தான்
யாரெனத் தானே கண்டு கொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.
அதே சமயம் காட்சி ஊடகத்தை முழுக்க நிராகரிக்கவும் முடியாது.
தொலைக்காட்சிக்குப் பதிலாக மிகச்சிறந்த திரைப்படங்களை, ஆவணப்படங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன்.
மிகநல்ல ஒரு சேகரிப்பு அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு உதவியானது. இன்று
உலகின் மிகத்தரமான புதிய ஆவணப்படம் எது என என் மகனிடம்தான் நான் கேட்டறிகிறேன்.
இன்று வந்த எந்தத் திரைப்படம் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான்
தெரிந்துகொள்கிறேன்.
என் இரு குழந்தைகளும் மகத்தான வாசகர்கள். அதற்கு நான் தொலைக்காட்சியை
நிறுத்தியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.
* * *
No comments:
Post a Comment